நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓவிட்ட, ஜெயசுந்தரபுர ஆகிய பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை பிரதேச மக்கள் பிடித்து நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நாவலப்பிட்டி ஓவிட்ட பகுதியில் சந்தேகத்தக்கு இடமான முறையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடமாடிய நபரொருவரை அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து பிடித்து ஜெயசுந்தரப் பகுதியில் உள்ள தொலைபேசிக் கம்பமொன்றில் கட்டி வைத்தனர்.
பொதுமக்களால் பிடிக்கப்பட்ட சந்தேக நபர் அதிகாலை வேளை குறிப்பிட்ட பிரதேசத்துக்கு வருகைத் தந்ததற்கான காரணத்தினைக் கூறவில்லை. அதிகாலை முதல் இந்த சந்தேக நபர் பிடிப்பட்டிருப்பது தொடர்பில் பிரதேசத்தில் ஏனைய மக்களுக்கும் தகவல் பரவியதால் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த சந்தேக நபரைக் காணுவதற்கு காலை 6 மணிவரை கூடியிருந்தனர்.
அதன் பின்பு காலை 6.15 மணிளவில் குறிப்பிட்ட இடத்துக்கு வருகைத் தந்த நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதய விக்கிரம தலைமையிலான பொலிஸார் சந்தேக நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு பொலிஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பிட்ட சந்தேக நபர் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் பல்வேறு குற்றச்செயல்களுக்காக சிறை சென்று வந்தவரென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





0 comments:
கருத்துரையிடுக