ஐக்கிய தேசியக் கட்சியில் தான், எந்தக் காலத்திலும் இணைந்து கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு, வேறு எந்தக் கட்சியிலும் இணைந்து கொள்ள மாட்டேன் என அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
நான் பிறந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்தான் இறப்பதும் அதே கட்சியில்தான் என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்;
இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இலங்கையில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தங்களது பைகளை நிரப்பிக்கொள்ளும் அரசியல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும்.
நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமாயின் வலுவான ஓர் எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்சி ஆட்சி நடத்துவதனால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. வலுவான ஓர் எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.





0 comments:
கருத்துரையிடுக