கிழக்கு மாகாண செய்தியாளர்:
ஆசிரியர்களது இடமாற்றம் சம்பந்தமாக அண்மைக்காலம் வரை பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை வலயங்களிலுள்ள பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு கடந்தகாலங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எதிர்வரும் ஆண்டுக்கான ஆசிரியர்களைச் சமப்படுத்தல் வேலைகள் கல்வி வலயங்கள் தோறும் நடைபெற்று வருவதாகத் தெரியவருகிறது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் தாங்கள் கற்பித்த பாடசாலைகளின் தரத்திற்கும் மற்றும் வசதிக்கேற்பவும் புள்ளிகளின் அடிப்படையில் இடமாற்றங்கள் நடைபெறுவதற்கான புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இதற்கிடையில் சில பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்கள் வயதானவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் வசதியான பாடசாலைகளில் நீண்டகாலம் சேவையாற்றி வருகின்றனர். இவர்களை நிச்சயமாக இடமாற்றியே ஆகவேண்டும். இந்த வயதான காலத்தில் இடமாறிச் சென்று அல்லது தூரப்பிரதேசத்திற்குச் சென்று எவ்வாறு சரியான கற்றல் கற்பித்தலை மேற்கொள் முடியும்? எனவும் சில முதிர்ந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர். எது எப்படியிருப்பினும் இடமாற்றம் என்பது கட்டாயம் நடைபெற்றே ஆகவேண்டும். இனிவரும் காலங்களில் புதிதாக கல்விப்புலத்தில் இணையும் ஆசிரியர்களை குறிப்பிட்ட காலப்பகுயில் தூரப்பிரதேசங்களுக்கு நியமனம் செய்கின்றபோது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட இடமிருக்காது என மூத்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, புதிதாக நியமனம் கிடைத்தவுடன் அரசியல்வாதிகளின் துணையுடன் தனது சொந்த வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்களும் உண்டு. சில ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றபோது பின்தங்கிய பாடசாலைகளுக்கே விரும்பிச் செல்கின்ற நிலையும் காணப்படுகிறது. இதற்கான காரணம் பின்தங்கிய பாடசாலைகளுக்கான விசேட கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும் நோக்குடனே செல்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக பின்தங்கிய பிரதேசத்தினை வசிப்பிடமாகக் கொண்ட ஆசிரியர்கள் அங்குள்ள பாடசாலைகளில் கற்பித்துவிட்டு விசேட கொடுப்பனவை பெறுகின்ற ஒருநிலையும் காணப்படுகிறது.
அதேவேளை இவ்வாறான ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்கின்றபோது பின்தங்கிய பிரதேச விசேட கொடுப்பனவு வழங்கப்படுகின்ற பாடசாலைகளுக்கே செல்வதில் ஆர்வமுள்ளவராகவும் காணப்படுகின்றனர். ஏதிர்காலத்தில் அமையவுள்ள இடமாற்றங்களின் போது இந்த விடயங்களையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மாகாண அமைச்சு மட்டத்தில் நடவடிக்ககை எடுப்பது நல்லது. எனவேதான் அனைத்து ஆசிரியர்களும், அனைத்துப் பிரதேச பாடசாலைகளிலும் தமது கற்பித்தலை மேற்கொள்ள சித்தமாய் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டுமென பெற்றோர்கள் தெரிவிக்கின்றர்.







0 comments:
கருத்துரையிடுக