மர்ம மனிதன் நடமாட்டம் காரணமாக பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிசாருடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களி்ல் உள்ள மக்களின் இயல்பு நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மர்ம மனிதர்களின் நடமாட்டம் பற்றிய அச்சங்களும் வதந்திகளும் அங்கு பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட காரணமாகியுள்ளன.
இதற்கிடையே சனிக்கிழமை அதிகாலை சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த அசம்பாவிதங்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கிறீஸ் பூதங்கள் பின்னணியில் ஏதாவது தீய சக்திகள் இருக்கலாம் என்று ஜனாதிபதி சந்தேகிப்பதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் சனிக்கிழமை காலை 6.00 மணியுடன் நீக்கப்பட்ட போதிலும் அந்த பிரதேசத்தில் நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. பிரதேசத்தில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டு, வீதிகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை மாலை பொத்துவில் பிரதேசத்தில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் அலியார் மொகமது மவ்ஜூன் என்ற இளைஞனின் ஜனாஸா நல்லடக்கம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதேவேளை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று மாலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்ததை அடுத்து தமது பிரதேசத்திலும் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தமிழோசையிடம் கூறினார். தற்போது அங்கு பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘கிரீஸ் பூதங்கள்` எனப்படுகின்ற மர்ம மனிதர்களின் நடமாட்டங்கள் குறித்து பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ள கிழக்கு மாகாணத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பொலிசாருக்கு மேலதிகமாக அங்கு இராணுவத்தினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நாவற்குடாவில் இன்று காலை மர்ம மனிதன் நடமாடுவதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் வீதிகளில் டயர்களைப் போட்டு எரித்து போக்குவரத்து தடைகளையும் ஏற்படுத்தினர். பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கு விரைந்து நிலமையை கட்டுப்படுத்தினர்.
மர்ம மனிதன் என சந்தேகத்தின் பேரில் பொதுமக்களால் பிடிக்கபட்ட நபரொருவர் பொலிஸாரால் மீட்கப்பட்டு தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை மக்களின் இவ்வாறான எதிர்ப்புகளை அடக்க இராணுவத்தினரை பயன்படுத்தும் நடைமுறை கைவிடப்பட வேண்டும் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
மக்கள் சட்டத்தை கையிலெடுக்கும் போக்கை கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மர்ம மனிதர்கள் பற்றிய முறைப்பாடுகளை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் கூறினார். அரசாங்கத்தின் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்குடன் செயற்படும் சக்திகள் ஏதும் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று ஜனாதிபதியும் சந்தேகிப்பதாக நீதியமைச்சர் தமிழோசையிடம் தெரிவித்தார்.










0 comments:
கருத்துரையிடுக