இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள மேல்நீதிமன்றம் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஐந்து சீனப் பிரஜைகளுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் 2003ஆம் ஆண்டில் சக சீனப்பிரஜை ஒருவரை கடத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் சீனப் பிரஜைகளான ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
கொலையுண்ட நபரின் உடலை நாட்டின் மத்திய பிராந்தியமான கண்டியில் உள்ள மலைப் பகுதியொன்றில் மறைத்துவிட்டு தப்ப முயன்றபோது கைதுசெய்யப்பட்ட இருவர் வழங்கிய தகவலை அடுத்தே மற்றைய மூவரும் கைது செய்யப்பட்டனர். வெள்ளவத்தையில் சீன உணவகமொன்றை நடத்திவந்த சீனப் பெண் ஒருவரும், அங்கு பணி புரிந்த மேலும் நான்கு ஊழியர்களும் சக ஊழியரைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பிணை வழங்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவர் தலை மறைவாகி விட்டனர்.
இந்தப் பின்னணியில், இரண்டு சந்தேக நபர்களின் சமுகமின்றி நடந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஐந்து பேருக்குமே கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தலை மறைவாகியுள்ள நபர்கள் இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் பிடியாணை வழங்கியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக அவர்களின் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.









0 comments:
கருத்துரையிடுக