அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இன்று கிண்ணஸ் உலக சாதனையொன்று நிலைநாட்டப்பட்டது

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்டனப் பேரணி

கிழக்கு மாகாணத்தில்‌ கிறீஸ் மனிதனைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராட்டம் நடாத்தும் பெண்கள்

கிழக்கு மாகாணசபையால் நடாத்தப்படும் நடுக்கடலுக்குள் சொகுசுப் பயணம் East Expo-2011

கவனிப்பாரற்ற நிலையில் வாழும் யாழ்ப்பாணம் மத்ரஷா வாழ் அகதிமுகாம் மக்கள்

திங்கள், 19 செப்டம்பர், 2011

அழிந்துவரும் மருதமுனை நெசவுத் தொழில்


புதியதொரு தலைமுறை இல்லாமல் அழிந்திடுமா மருதமுனையின் நெசவுத் தொழில் (ஒரு நேரடி ரிப்போர்ட்)

- முஹம்மட் பிறவ்ஸ்


அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலை என அழைக்கப்படும் கல்முனை மாநகரிலிருந்து வடக்கே 2.3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிரதேசமே மருதமுனை. ஒவ்வொரு இடத்துக்கும் தனியானதொரு அடையாளம் இருக்கும். அதுபோல கிழக்கு மாகாணத்தில் நெசவுத் தொழிலுக்குப் பெயர்போன இடம்தான் மருதமுனை.

கடந்த சுனாமி அனர்த்தத்தில் இலங்கையில் பாரியளவிலான அழிவுகளைச் சந்தித்ததும் இக்கிராமம்தான். இங்கு நெசவுத் தொழிலானது ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்றுவரை இருந்துவருகின்ற ஒரு புராதனமிக்க கைத்தொழிலாகும். மருதமுனையில் நெய்யப்பட்ட சாரம் அல்லது உடுதுணிகள் என்றால் இலங்கை மட்டுமல்ல சர்வதேசத்தில்கூட இதற்கென தனியானதொரு கிராக்கி இருக்கின்றது. மக்கள் இங்குள்ள பொருட்களை அதிக விலைகொடுத்து வாங்க முன்வருகிறார்கள். 


நெசவுத்தொழிலின் இன்றையநிலை பற்றி அறி வதற்கு அண்மையில் மருதமுனைக்குச் சென்றேன். அங்கு நெசவுத்துறையில் பாண்டித்தியம் பெற்ற 59 வயதான ஒஸனாரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது பரம்பரை 1932 இலிருந்து இத்தொழிலைச் செய்துவருகின்றது. ஒஸனாரிடம் அவரது தொழிலைப் பற்றிக்கேட்டபோது;

"நான் சாரம், சேர்ட் துணி, சாரி, மேசைச்சீலை, தலையாணி உறை, பெட்சீட், கால் தட்டி எண்டு பல உற்பத்திகளச் செய்றன். நாங்க இங்க நூல் வாங்குறது எண்டா, வாங்கி விக்கிறவங்க கிட்டத்தான் வாங்குறம். 2:80 என்கிற நூல் 1650 ரூபாக்கு தாறாங்க. அதுக்கு டை பண்ணி (சாயம் போட்டு) எடுக்க எல்லாமாச்சேர்ந்து 2200 ரூபா ஒரு கிலோவுக்கு செலவாகும். இங்க பொதுவா யூஸ் பண்ணுறது Homt என்கிற நூல்தான். பொறகு அந்த நூலைச் சுத்தியெடுத்து கைத்தறியில் போட்டு காலாலும் கையாலும்தான் தறியடிக்கவேணும். அதுல நமக்கு வேண்டிய மாதிரி டிசைனைப் போட்டுக்கலாம்.


என்கிட்ட 23 கைத்தறி (hand loom) இருக்கி. ஆனா, வேலக்கி ஆக்கள் இல்ல. சுனாமிக்குப் பொறகு, வேல செஞ்ச ஆக்களெல்லாம் மத்த மத்த வேலக்கி சம்பளம் காணாதெண்டு போயிட்டாங்க. அதுக்குப்பொறகு இந்த வேலக்கி இன்னொரு தலைமுறை வருது இல்ல. வறிய நாடுகளுக்கு எங்கட சாமானக் குடுத்தா கூட சம்பளம் குடுக்க ஏலா. செல்வந்த நாடு எண்டா, நல்ல சம்பளம் குடுக்கலாம். உதாரணத்துக்கு நோர்வேக்கு ஒரு "சேர்ட்' செஞ்சி குடுத்தா 8 ஆயிரம் ரூபா தருவாங்க' என்றார்.

சர்வதேசத்திலேயே இவர்களது உற்பத்திகளுக்கு அதிகளவான சந்தை வாய்ப்புகள் இருப்பதாகவும் போதியளவான மனிதவளம் இல்லாமையால் அவர்கள் கேட்கின்ற தொகையை தன்னால் உற்பத்தி செய்யமுடியால் போய்விட்டதாகவும் கூறி நொந்து கொண்டார்.



"இதுக்குள்ள புதிய இளம் பிள்ளயல் வாறங்க இல்ல. இப்ப இரிக்கிறவங்க கைத்தொழில் எண்டா, அத கௌரவக் குறச்சலாத்தான் நெனக்கிறாங்க. இதுல நல்ல எதிர்காலம் இருக்கு. ஆனா, யாரும் முன்வாறாங்க இல்ல. இந்த தலைமுறையோடயே இந்தத் தொழில் நின்டாலும் ஆச்சரியப்பட ஏலா. நானும் திருக்கோவில், விநாயகபுரம், சத்துருக் கொண்டான் எண்டு பல இடங்களுக்கும் பிள்ளயலுக்கு ரெயினிங்க குடுத்தேன். ஆனா, அங்க மூலப்பொருள் எடுக்குற வசதி இல்ல. அதுகள் இங்கதான் வரவேண்டிக் கெடக்கு. அதால அந்தத்தொழில் இங்கயோடயே நிக்குது. அவங்களுக்கும் ஆர்வம் குறஞ்சி போச்சி' என்று தனது ஆதங்கத்தை எம்மிடம் கொட்டித்தீர்த்தார்.


என்னிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவரது கைத்தறி இயந்திரங்களை அறிமுகப்படுத்தினார். அந்நேரத்தில் அவரிடம் வேலைசெய்கின்றவர்கள் வேலை முடித்துவிட்டு வீடு சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு நாட் சம்பளம் இல்லாமல், உற்பத்திகளுக்கே கூலி கொடுப்பதால் அதிகநேரம் இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் பயன்படுத்திய தறிவகைகளையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. வேலைசெய்கின்ற அனைத்து கைத்தறிகளையும் தானே சுயமாக உரு வாக்கியதாகக் கூறும்போது வியந்து போனேன்.


அவர் இத்தொழிலின் சந்தைப்படுத்தல் பற்றிக் கூறும்போது; "நான் 850 ரூபாக்கு கொம்பனிக்கு சாரம் குடுக்குறன். அவங்க அத 1300 ரூபாக்கு விக்கிறாங்க. சுனாமிக்கு முதல்ல இலங்க அரசாங் கத்துக்கு வருசம் ஒண்டுக்கு ரெண்டாயிரம் சாரிகள் 13 லெச்சம் ரூபாக்கு நான் குடுத்து வந்தன். இப்ப சாமா னுக்கு வில கூட. ஆனா, அவங்க அதே விலைக்கி கேக்குறதால நான் இப்ப குடுக்கிறதில்ல. என்கிட்ட 4 ஆம்புளயலும் 6 பொம்புளயலும் வேல செய்றாங்க. அவங்களுக்கு தறியடிக்குறதுக்கு 1 மீற்றருக்கு 75 ரூபா குடுக்கிறன்' என்றார்.


இவரது அனுபவம், கலைத்திறன் போன்றவற்றால் நோர்வே, இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளார். அங்கு இவர் விசேடமான பல பயிற்சிகள், தொழில்நுட்பங்கள், தொழில்விருத்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது இலங் கையில் நடைபெற்ற பல கைத்தொழில் கண்காட்சிகளில் இவருக்குப் பல விருதுகளும் சான்றிதழ்களும் கிடைத்துள்ளன.


இலங்கை அரசாங்கம் நூலை இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக இறக்குமதி செய்து நியாயமான விலைக்கு தரவேண்டும் என்று பொதுவானதொரு கைத்தறியாளர் என்றவகையில் கேட்டுக்கொண்டார். மருதமுனையில் நெசவுத்தொழிலை அழியவிடாமல் பாதுகாக்க பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார் ஒஸனார். ஆகவே, இதன் பெறுமதியை உணர்ந்து நெசவுத் தொழிலை மருதமுனை மட்டு மல்லாது நாடுபூராவும் ஊக்குவிக்கவேண்டியது கட்டாயமானது.



நன்றி: இருக்கிறம்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

மூவரையும் தூக்கிலிருந்து தப்புவிக்க சண்முகத்தின் தூக்கு மரணம்


- ரிஷி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், மீண்டும் பழைய சம்பவங்கள் கிளறப்படும் சாத்தியம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் மரணத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியில், முன்பு புலன்விசாரணையில் கவனிக்காது விடப்பட்ட சில விஷயங்கள், உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. இதற்குக் காரணம், இந்த வழக்கு பற்றிய விசாரணை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை என்பதே.

“வழக்கின் விசாரணையே முழுமையாக முடிவடையாத நிலையில், அதில் சம்மந்தப்பட்ட மூவருக்கு ஏன் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்? என்ற கேள்வியும், “விசாரணையை முதலில் முடியுங்கள், அதன்பின்னரும் இந்த மூவரும் தூக்குத் தண்டனை பெறக்கூடிய வகையில் குற்றம் செய்தவர்களா என்று பார்க்கலாம் என்ற வாதமும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படலாம். இதற்குக் காரணம், இந்த வழக்கில் சில loose ends உள்ளன. விசாரணையை முடிக்காமல் இன்னமும் வைத்திருப்பதன் காரணமும் அதுதான்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் மரணத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் தமிழகம் எங்கும் போராட்டங்கள் ஒருபக்கமாக நடக்க, தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து கருணை மனுவை ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சிகள் மற்றொரு பக்கமாக நடக்க, மூன்றாவது பக்கமாக நடைபெறும் முயற்சிகள்தான், உயர் நீதிமன்றம் மூலமாக நடைபெறத் தொடங்கியுள்ளன.

உயர் நீதிமன்றத்தில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகியுள்ளார் ‘இந்தியாவின் மிகத் திறமைசாலியான வக்கீல்’ என்று கருதப்படும் ராம் ஜெத்மலானி. உயர் நீதிமன்றத்தில் அவருடைய வாதம் காரணமாக, மூவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட முடியாமல் 8 வாரங்களுக்கு தடையுத்தரவு போட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

8 வாரங்களுக்குப் பின் என்ன நடக்கும்?


ராம் ஜெத்மலானி இந்த வழக்கில் தீவிரமாக இறங்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. நீதித்துறை வட்டாரங்களில் ராம் ஜெத்மலானி பற்றி ஹிந்தியில் பிரபலமான கூற்று ஒன்று உண்டு. “ஒரு வழக்கில் இவர் நுழைந்தால், வழக்கின் இறுதி துரும்பைக்கூட எடுத்து பல் குத்தாமல் விடமாட்டார்” என்பதே அது!

அப்படியான ஒருவரிடம், loose ends காரணமாக, முழுமையாக விசாரணை முடிவடையாத வழக்கு ஒன்றில் மூவருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்ட வழக்கு வந்திருக்கிறது. “விசாரணையை முதலில் முழுமையாக முடியுங்கள் பார்க்கலாம்” என்று அவர் வாதம் செய்யத் தொடங்கினால், ராஜிவ் காந்தி கொலை வழக்கில், மீண்டும் பழைய சம்பவங்கள் கிளறப்படும் சாத்தியம் ஏற்படும்.

வழக்கிலுள்ள loose endsல் ஒன்று, சந்திராசாமி, சுப்ரமணியம் சுவாமி ஆகிய இருவரும் முழுமையாக விசாரிக்கப்படாதது. மற்றையது, கோடியக்கரை (கோடிக்கரை என்றும் சொல்வார்கள்) சண்முகம் பற்றியது. இவர் ராஜிவ் கொலையைக் கையாண்ட புலனாய்வுக் குழுவினரால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, இறந்து போனார். ராஜிவ் கொலை வழக்கு விசாரணையின்போது, அவரது மரணம் பற்றி அடக்கி வாசிக்கப்பட்டது.


இந்த இரு விவகாரங்களுமே மீண்டும் கிளறப்படலாம். மறு விசாரணை அல்லது விசாரணையின் தொடர்ச்சியை நடத்துமாறு ராம் ஜெத்மலானி கோரலாம்.

ராஜிவ் கொலை வழக்கை விசாரிப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன், “சந்திரா சாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகிய இருவரையுமே நாம் விசாரிக்க வேண்டியிருக்கிறது. விசாரணைக்கு அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்று கூறியிருந்தது. இது ஜெயின் கமிஷன் அறிக்கையில் பதிவாகியுள்ளது.

ஜெயின் கமிஷனின் இந்தக் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலதிக விசாரணைக்காக என்றே புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு ‘பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு’ என்று பெயரும் வைத்தார்கள். இந்த குழு 15 வருடங்களுக்கு மேலாக இயங்கியும், சுப்ரமணியன் சுவாமியையும், சந்திரா சாமியையும் இன்றுவரை விசாரிக்கவில்லை.

ஆனால், அதே நேரத்தில் இந்த இருவருக்கும் ராஜிவ் காந்தியின் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று குற்றம் சுமத்தும் வாக்குமூலங்கள், ஜெயின் கமிஷன் அறிக்கையில் பதிவாகியுள்ளதை இன்றும் காணலாம்.


ஜெயின் கமிஷன் விசாரணையின்போது, சுப்ரமணியன் சுவாமியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு புலன்விசாரணைகூட முறையாகத் தொடங்கப்படாத நேரத்தில், ‘இந்தக் கொலையைச் செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று உங்களால் எப்படி அறிவிக்க முடிந்தது? அந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?”

இதற்கு அவர் கொடுத்துள்ள பதில், “எனக்கு ஸ்ரீலங்காவில் இருந்து ஒருவர் தகவல் கொடுத்தார் என்பதுதான்.

சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, 1990-91ல் மத்திய அரசில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியன் சுவாமி. அதாவது, ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நேரத்தில் இவர்தான் இந்தியாவின் சட்ட அமைச்சர். அப்படியான முக்கிய பொறுப்பிலுள்ள ஒருவர், இந்தியாவின் முன்னாள பிரதமர் கொல்லப்பட்ட உடனே, புலனாய்வுகூட தொடங்கும் முன், ‘இந்தக் கொலையைச் செய்தது விடுதலைப் புலிகள்தான்’ என்று அறிவிக்கிறார்.

ஒரு நாட்டின் சட்டத்துறை அமைச்சரே இப்படியொரு அவசர அறிவிப்பை வெளியிட வேண்டுமானால், அவருக்கு ‘ஸ்ரீலங்காவில் இருந்து தகவல் கொடுத்தவர்’ எவ்வளவு நம்பிக்கைக்குரிய நபராக இருக்க வேண்டும்!

ஜெயின் கமிஷன் விசாரணையில், “உங்களுக்கு ஸ்ரீலங்காவிலிருந்து தகவல் கொடுத்த நபர் யார்?” என்று கேட்கப்பட்டபோது, அதற்கு சுப்ரமணியன் சுவாமியின் பதில் – மௌனம்!

இதையடுத்தே, “சுப்ரமணியன் சுவாமி விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை” என்று ஜெயின் கமிஷன் கூறி, ‘பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு’ ஒன்றை அமைத்தது. அதன் விசாரணை இன்னமும் முடிவடையவில்லை.

இரண்டாவது விவகாரம், கோடியக்கரை சண்முகத்தின் சந்தேகத்துக்குரிய மரணம்! (ராஜிவ் காந்தி கொலையைப் புலனாய்வு செய்த சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக்குழு, இந்த மரணத்தை தற்கொலை என்கிறது)

சந்தேகத்துக்குரிய இந்த மரணம் பற்றி மிக விரிவாக விறுவிறுப்பு.காம் வாராவாரம் வெளியிடும் ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ தொடரின் சில அத்தியாயங்களில் இடம்பெறவுள்ளதால், அதைப்பற்றி சுருக்கமாக தருகிறோம்.

கோடியக்கரை சண்முகம் ஒரு வர்த்தகர் என்று சொல்லப்பட்டாலும், அவரது பிரதான தொழில் கடத்தல்தான். தமிழகத்தின் வேதாரண்யம் கடற்கரைப் பகுதியிலிருந்து ஸ்ரீலங்காவின் மன்னார் பகுதிக்கு படகுகள் மூலம் பொருட்கள் கடத்துவதே இவரது வழக்கம்.

இந்தப் பகுதியில், விடுதலைப்புலிகளும் மற்றைய இயக்கத்தினரும் ஆயுதங்கள், எரிபொருள், மற்றும் வெறு பொருட்களைக் கடத்துவது அதிகமாகவே, ஒரு கட்டத்தில் சண்முகம் அந்தக் கடத்தல்களின் இந்திய முகவராக மாத்திரம் இயங்கத் தொடங்கினார். அதாவது இந்திய சைடில்தான் இவரது நடவடிக்கைகள் இருந்தன.

சுருக்கமாகச் சொன்னால், சண்முகத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இருந்த தொடர்பு, வேதாரண்யம் பகுதியில் ஒன்றும் ரகசியமல்ல. ராஜிவ் கொல்லப்பட்டபின் தொடங்கிய புலனாய்வின்போது, சில தடயங்கள் புலனாய்வுக் குழுவை வேதாரண்யம்வரை இழுத்துச் சென்றன.

1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். புலனாய்வுக்குழு ஹெலிகொப்டர் மூலம் வேதாரண்யம் போய் இறங்கியது, ஜூலை 18-ம் திகதி.

இவர்கள் போய் இறங்கியது முருகன் (தற்போது தூக்குத் தண்டனை பெற்றுள்ளவர்) வேதாரண்யத்தில் விட்டு வந்திருந்த சூட்கேஸ் ஒன்றைக் கைப்பற்றுவதற்கு! அந்த சூட்கேஸ் சண்முகத்திடம் இருந்தது என்பதே இவர்களுக்கு கிடைத்த தகவல்.


விஷயம் தமிழக காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டு சண்முகத்தைப் பிடித்துக் கொடுக்குமாறு கோரப்பட்டதில், சண்முகம் ஜூலை 17ஆம் திகதி தமிழக பொலீசாரிடம் சரணடைந்திருந்தார். சென்னை கொண்டு செல்லப்பட்ட சண்முகத்தை விசாரித்தபோது, விடுதலைப்புலிகள் வேதாரண்யத்தில் புதைத்து வைத்திருந்த ஆயுதங்கள். வெடிப்பொருட்கள் மற்றும் ஒயர்லெஸ் செட்கள் இருக்குமிடம் அவருக்கு தெரியும் என்பதைக் கண்டுகொண்டது புலனாய்வுக்குழு.

இதனால், 18ஆம் தேதி அவரையும் வேதாரண்யம் அழைத்துச் சென்றிருந்தது புலனாய்வுக்குழு.

அவர் அடையாளம் காட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்ததில், புலிகள் புதைத்து வைத்திருந்த பொருட்கள் அகப்பட்டன. 121 பெட்டிகளில் சக்தி வாய்ந்த வெடிபொருள்கள், 66 டிரம்கள், பிளாஸ்டிக் கேன்களில் பெட்றோல், டீசல் மற்றும் ஜப்பான் தயாரிப்பான ஒயர்லெஸ் சாதனம் ஆகியவை எடுக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. அதெல்லாம் முடிய, 19ம் தேதி இரவாகிவிட்டது.

அதன்பின், சண்முகத்தை வேதாரண்யத்தில் உள்ள ஆய்வு மாளிகைக்கு (இன்ஸ்பெக்ஷன் பங்களா) அழைத்துச் சென்று, மேலும் விசாரணை நடத்தியது புலனாய்வுக்குழு. வேதாரண்யம் ஆய்வு மாளிகையில் இரு அறைகள் இருந்தன. ஓர் அறையில் புலனாய்வுக் குழுவின் மூத்த அதிகாரிகள் இருவர் இருந்தனர். மற்றொரு அறையில் ஒரு டி.எஸ்.பி., 3 போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் இருந்தனர். உள்ளூர் பொலீசார் இருவர் இவர்களுக்கு உதவியாக இருந்தனர்.

உயரதிகாரிகள் உட்பட, மொத்தம் 8 பேர்.

விசாரணையை முடித்துக்கொண்ட புலனாய்வு மூத்த அதிகாரி, தனது உதவிக்கு இருந்த பொலிஸ்காரர்களை அழைத்து, சண்முகத்தைக் கைவிலங்கிட்டு உள்ளூர் பொலீஸ் நிலையத்தில் வைத்திருக்குமாறு கூறினார். அதற்கு முன்னதாக, சண்முகம் இரவு உணவு சாப்பிட வேண்டியிருந்தது. அவருக்கு ஆய்வு மாளிகையிலேயே உணலு தருவித்துக் கொடுக்கப்பட்டது. அப்போது 19ம் தேதி இரவு 9 மணி.

உணவு உண்டபின் கை கழுவுவதற்காகச் சென்றார் சண்முகம். அவருடன் ஒரு போலிசும் இருந்தார். சண்முகம் திடீரெனப் பின் கதவை திறந்துகொண்டு இருளில் தப்பி ஓடினார் என்று கூறப்படுகிறது. ஓடும்போது, தனது வேட்டியையும், சட்டையையும் கழற்றி எறிந்துவிட்டு ஓடினார் என்று புலனாய்வு ரிப்போர்ட் கூறுகிறது (கடத்தல்காரர்கள் இரவில் கடற்கரையோரமாக கடத்தில் தொழில் செய்யும்போது, வெள்ளை வேட்டி. சட்டை அணிய மாட்டார்கள். இருளில் ஆட்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் இந்தப் பழக்கம்)

புலனாய்வுக் குழு உயரதிகாரிகள் ஓடிச்சென்று பார்த்தபோது, வெளியே சண்முகம் கழற்றி எறிந்துவிட்டு ஓடிய வேட்டியும், சட்டையும் மாத்திரமே கிடைத்தன என்றும் சி.பி.ஐ. ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

அன்றிரவு முழுவதும், வேதாரண்யம் பகுதி முழுவதையும் துருவித் துருவி தேடினார்கள். உள்ளூர் பொலீசாரையும், கரையோரக் கடமையில் இருந்த மத்திய பாதுகாப்பு பொலீஸ் படையினரையும் தேடுதலில் ஈடுபடுத்தினர்.

மறுநாள், ஜூலை 20ஆம் தேதி காலையில், இன்ஸ்பெக்ஷன் பங்களா அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது சண்முகத்தின் உடல்! அவரது காலடியில் கிடந்தது என்ன தெரியுமா?

லுங்கி! தூக்கு போடப்பட்ட அவரது உடலில் இருந்து அவிழ்ந்து விழுந்த லுங்கி!!

வேட்டி, சட்டையைக் கழட்டி எறிந்துவிட்டு ஓடியவருக்கு, அணிவதற்கு எப்படி லுங்கி கிடைத்து அணிந்தார்? தூக்கு மாட்ட கயிறு கிடைத்தது எப்படி? இந்தக் கேள்விக்கு பதில் கிடையாது.

சென்னையிலிருந்து வேதாரண்யம் கொண்டு வரப்பட்டபோது, சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவுடன் ஒத்துழைத்து, விடுதலைப் புலிகளின் பொருட்கள் புதைத்து வைத்த இடத்தையும் துல்லியமாகக் காட்டிக் கொடுத்துவிட்டு, இரவு உணவையும் முடித்த பின்னர், 8 பேர் இருந்த வீட்டிலிருந்து தப்பியோடி, அந்த வீட்டுக்கு வெளியேயுள்ள மரத்திலேயே தற்கொலை செய்து கொள்வது, அவ்வளவு நம்பும்படியாக இல்லையே!


ஜூலை 21ஆம் திகதி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ், ‘பொலீஸ் காவலில் மரணமா? தற்கொலையா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தது. ஜூலை 22ம் திகதி ஹிந்து ஆங்கில நாளிதழ், ‘சிறப்புப் புலனாய்வுப்படையின் புலன் விசாரணையில் பின்னடைவு’ எனக் கூறியது . ஜூலை 23ம் திகதி டெக்கான் ஹெரால்ட், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, அதன் தலைவர் அப்போதைய நரசிம்மராவ் தலைமையில் கூடி, ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையை சிறப்புப் புலனாய்வுப்படை கையாளும் விதத்தைக் கடுமையாகச் சாடியதாக செய்தி வெளியிட்டது.

ஆனால், இறுதி விசாரணையின்போது நீதிமன்றத்தில் இந்த விவகாரம் அன்டர்-பிளே பண்ணி பெரிதாக்கவில்லை.

இது நடைபெற்ற காலப்பகுதியில், ராஜ்யசபா எம்.பி. ஒருவர், நாடாளுமன்றத்தில் இதுபற்றிப் பேசியதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது சி.பி.ஐ. அவர் அப்படி என்ன பேசினார்?

டில்லி திஹார் சிறையிலிருந்து சார்லஸ் சோப்ராஜ் தப்பியது உட்பட, காவலிலிருந்து கைதிகள் தப்பிய பல்வேறு சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார். “நமது நாகரிகமான சட்டம் காரணமாகத்தான், கைதிகளால் தப்பிச்செல்ல முடிகிறது. இது அவ்வப்போது நடப்பதைத் தடுப்பது சுலபமல்ல” என்றார்.


“ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த ‘அவரே’ சொல்லிவிட்டார், இதெல்லாம் (காவலில் இருந்து தப்புவது) சகஜம்தான்” என்றது சி.பி.ஐ. அதன்பின், கோடியக்கரை சண்முகத்தின் மரணம், ராஜிவ் கொலை விசாரணையில் பெரிய விவகாரம் ஆக்கப்படவில்லை.

சரி, சி.பி.ஐ. ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த ‘அவரே’ சொல்லிவிட்டார் என்று சிலாகித்த அந்த நாளைய ராஜ்யசபா எம்.பி. யார் தெரியுமா?

ராம் ஜெத்மலானி! தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் காப்பாற்ற வந்திருக்கும் அதே வக்கீல் ராம் ஜெத்மலானி!!

அவர், தனது வாதத்தில் இந்த விவகாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என்று நாம் கூறுவதன் காரணம், இப்போது புரிகிறதா?

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

செப்டெம்பர் 11 தாக்குதல் ஒரு ரகசியம்


அமெரிக்காவைக் கதிகலங்க வைத்த செப்டம்பர் 11ஆம் திகதிய தாக்குதல் நடைபெறுவதற்கு 9 மாதங்களுக்கு முன்னரே, அதுபற்றிய உளவுத் தகவல் கிடைத்த விஷயம் வெளியாகி,  மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த உளவுத் தகவல் பிரென்ச் உளவுத்துறை DGSEயிடமிருந்து கிடைத்திருந்தது. இந்தத் தகவலை வெளியிட்டு பரபரப்பு ஒன்றைக் கிளப்பிவிட்டிருக்கின்றது, பிரான்சில் இருந்து வெளியாகும் Le Monde பத்திரிகை.


பிரான்சின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் இந்த ரகசியத்தைத் தமக்குத் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறது அப் பத்திரிகை. அந்த அதிகாரி மூலம் பிரென்ச் உளவுத் துறையின் அதி ரகசிய கைல் ஒன்றையும் பெற்றிருக்கிறது Le Monde. பிரென்ச் உளவுத்துறையில் அதி ரகசிய பைலில் 328 பக்கங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைலில் உள்ள குறிப்புகள்தான், பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்களின் ஆதாரம்.

இதில் ஒரு குறிப்பு, ஜனவரி 5ஆம் திகதி 2001ஆம் ஆண்டு திகதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அதன் தலைப்பு – “அல்-கய்தா இயக்கம், அமெரிக்காவுக்கு எதிரான விமானக் கடத்தல் ஒன்றைத் திட்டமிடுகிறது.


குறிப்புக்களில் கூறப்பட்டுள்ள சில விபரங்கள் துல்லியமானவை.

உதாரணமாக, அமெரிக்காவுக்கு எதிரான விமானக் கடத்தலுக்கு, அமெரிக்க விமான நிறுவனங்களில் விமானங்களை கடத்துவதே அல்-கய்தாவின் திட்டம் என்ற குறிப்பு, பிரென்ச் உளவுத்துறையால் எழுதப்பட்டிருக்கின்றது. குறிப்பு எமுதப்பட்டு 8 மாதங்களின்பின் நடைபெற்றதும், அதுதான்.

அத்துடன், எந்தெந்த விமான நிறுவனங்களின் விமானங்கள் கடத்தப்படலாம் என்பதும் பிரென்ச் உளவுக் குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது.  அதில்,  அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இருக்கின்றன. இவ்வளவு துல்லியமான சில குறிப்புக்கள் இருந்தும், வேறு சில குறிப்புக்களில் கோட்டை விட்டிருக்கிறது பிரென்ச் உளவுத்துறை DGSE.


அமெரிக்காவின் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களைக் கடத்தப் போகின்றார்கள் என்ற குறிப்பு அதில் இல்லை. மாறாக, அதற்குத் தலைகீழான குறிப்பு ஒன்று உள்ளது. அதன்படி, ஐரோப்பிய விமான நிலையங்களில் இருந்து, (முக்கியமாக ஜேர்மன் விமான நிலையங்களில் இருந்து) அமெரிக்கா நோக்கிப் புறப்படும் விமானங்களைத்தான் கடத்தல்காரர்கள் குறிவைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள், ஒரே நேரத்தில் கடத்தப்படுவதுதான் திட்டம் என்ற தகவலும் இந்தக் குறிப்புகளில் இல்லை. Le Monde பத்திரிகை,  பிரென்ச் உளவுத்துறையின் ரகசிய பைலிலுள்ள குறிப்பு ஒன்றை முழுமையாகப் பிரசுரித்துள்ளது.  அதிலுள்ள விபரங்களைப் பாருங்கள்.


2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஆப்கானிஸ்தானிலுள்ள காபுல் நகரில் பின்லேடன், ரகசியக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார்.  கூட்டத்தில், தலிபான் தலைவர்கள் சிலரும்,   செஸ்னியா நாட்டு தலைவர்கள் சிலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க விமானங்களைக் கடத்தி, அமெரிக்க இலக்குகள்மீது மோதுவது பற்றி அந்தக் கூட்டத்தில்தான் முதன் முதலில், பிரஸ்தாபித்திருக்கிறார் பின்லேடன். ஜேர்மனியிலுள்ள பிராங்பேர்ட் விமானநிலையத்திலிருந்து புறப்படும் அமெரிக்க விமானம் ஒன்றை அல் – கய்தா கடத்த எற்பாடுகள் முடிந்துவிட்டன என்று பின்லேடன் கூறியதாகத் தெரிவிக்கிறது அந்தக் குறிப்பு.

இந்தத் தகவல்கள் பிரென்ச் உளவுத்துறைக்கு எப்படிக் கிடைத்தன?


உஸ்பெக்கிஸ்தான் உளவுத்துறையிடம் இருந்து தங்களுக்கு இத்தகவல்கள் கிடைத்ததாக பிரென்ச் உளவுத்துறையின் குறிப்புக்கள் சொல்கின்றன. பிரென்ச் உளவுத்துறையின் குறிப்புக்களில், 5 விமான நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், கன்டினென்டல், யுனைட்டட் ஏயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன், ஐந்தாவதாக யு.எஸ். ஏரோ என்ற நிறுவனத்தின் பெயரும் குறிக்கப்பட்டிருக்கிறது. இது எதைக் குறிக்கின்றது என்பது சரியாகத் தெரியவில்லை. காரணம் யு.எஸ். ஏரோ என்ற பெயரில் அமெரிக்காவில் சர்வதேச விமான நிறுவனம் எதுவும் கிடையாது.

இப்படியொரு தகவல் பிரென்ச் உளவுத் துறையிடம் இருந்து கிடைத்ததை அமெரிக்கா ஒப்புக் கொள்கிறதா?


ஆம். ஆச்சரியகரமாக அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது. சி.ஐ.ஏ.யின் பேச்சாளர்களில் ஒருவரான ஜோர்ஜ் லிட்டெல்,  பிரென்ச் உளவுத்துறை இந்தக் குறிப்புக்களை செப்.11ஆம் திகதி தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பே சி.ஐ.ஏ.யிடம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

ஜோர்ஜ் லிட்டெல்,  அவர்களுக்குக் கிடைத்தது போன்ற சில உளவுத்தகவல்கள் எங்களுக்கும் கிடைத்திருந்தன. ஆனால், தாக்குதல் நடைபெறப்போகும் தேதி அல்லது இடம் பற்றி அவர்களிடமும் தகவல் இல்லை. எங்களிடமும் தகவல் இருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.


பிரென்ச் உளவுத்துறை DGSEயின் முன்னாள் பாதுகாப்புத்துறைத் தலைவர் அலைன் சொவுட், “உளவுத்துறைகளைச் சேர்ந்த அனைவருக்குமே இப்படி ஒரு விவகாரம் திட்டமிடப்படுகின்றது என்பது தெரியும். அது ஒரு விமானக் கடத்தல் என்பதும் தெரியும். அல் – கய்தாவால் நடாத்தப்படவுள்ளது என்பதும் தெரியும்” என்று கூறியுள்ளார்.

“எமது அமெரிக்க உளவுத்துறை நண்பர்களுக்கும் தெரியும், ஐரோப்பிய உளவுத்துறை நண்பர்களுக்கும் தெரியும். எந்த நிமிடத்திலும் விமானக் கடத்தல் நடைபெறலாம் என்று, டைம் பாம் ஒன்றின் மேல் உட்கார்ந்திருப்பது போல இருந்தோம். ஆனால் கடத்தப்படப்போவது அமெரிக்காவில் இருந்து புறப்படப் போகும விமானங்கள் என்று எங்களில் யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியதாக எழுதியுள்ளது Le Monde பத்திரிகை.

சரி. இந்தத் தகவல்கள் உளவுத்துறைக்கு எப்படித் தெரியவந்தன?  அதைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.


அப்துல் ரஷீட் என்பவர் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த, ஆப்கான் ஆயுத வியாபாரி. தலிபான்களுக்கு ஆயுத சப்ளை செய்தவரும் அவர்தான். அதேநேரத்தில் உஸ்பெக் உளவுத்துறையுடனும் தொடர்புகளை வைத்திருந்திருக்கிறார். தலிபான்களின் தொடர்பு மூலமாக தனது ஆட்களை அல்-கய்தாவின் முகாம்களுக்குள் ஊடுருவ விட்டிருந்த அப்துல் ரஷீட், அல் – கய்தா முகாம்களில் இருந்துதான் விமானக்கடத்தல் பற்றிய தகவலைப் பெற்றிருக்கிறார்.

அதை அவர் உஸ்பெக் உளவுத்துறைக்குத் தெரிவிக்க, அவர்கள் பிரென்ச் உளவுத்துறைக்குத் தெரிவித்திருக்கிறார்கள். (தகவல் கொடுத்த அப்துல் ரஷீட் இப்போது ஆப்கான் ராணுவத்தின் தளபதிகளில் ஒருவர்!)


இப்படியொரு தகவல் கிடைத்தும், அமெரிக்க உளவுத்துறை அதில் முழுமையாகக் கவனம் செலுத்தாமல் விட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. அது என்னவென்றால் அந்தக் காலகட்டத்தில் அல்-காய்தா அமைப்பு சில தந்திரங்களைச் செய்துகொண்டிருந்தது. மேலை நாட்டு உளவுத்துறைகளை திசை திருப்ப, அல்-காய்தாவே வேண்டுமென்று சில தகவல்களை லீக் செய்துகொண்டிருந்தது.

அப்படி லீக் செய்யப்பட்ட எந்தத் தகவலும், நிஜமான தகவல்கள் கிடையாது. செப். 11 தாக்குதலுக்குமுன் கடைசியாக அல்-காய்தாவால் லீக் செய்யப்பட்ட ‘போலி உளவுத் தகவல், பிரான்ஸை மையப்படுத்தியே அவிழ்த்து விடப்பட்டிருந்தது.

இதோ, இந்தத் திட்டத்தையும் பாருங்கள்:

பின்லேடனின் நெருங்கிய சகாவான ஜமால் பெகால் என்பவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்தபோது, அவரிடம் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் திட்டம் ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்தத் திட்டம், பாரிஸிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு தற்கொலைப் போராளிகளை அனுப்பி, அந்த கட்டடத்தையே தகர்க்கும் திட்டம்.


அவரிடம் இருந்த திட்டம் மிகத் துல்லியமாக இருந்தது. அமெரிக்க தூதரகம் பற்றி அவர் வைத்திருந்த விபரங்கள்கூட நிஜமானவையாகவே இருந்தன.   இதுதான் அல்-காய்தாவின் நிஜமான தாக்குதலாக இருக்கப் போகின்றது என சி.ஐ.ஏ. நம்பும் அளவுக்கு, திட்டம் முழுவதும் பக்காவாக இருந்தது.


இந்த விபரங்கள் சி.ஐ.ஏ.க்கு தெரியவந்தது எப்போது தெரியுமா?  செப். 11ஆம் திகதிய தாக்குதலுக்கு, சில தினங்களுக்கு முன்பு!அமெரிக்க மற்றும் பிரென்ச் உளவுத்துறைகள் பாரிஸிலுள்ள அமெரிக்கத் தூதரக தற்கொலைத் தாக்குதல் பற்றிக் கவனம் செலுத்திக் கொண்டிருக்க செப்டம்பர் 11இல், அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்றது.

- மூலம் Le Monde பத்திரிகை

எப்போது கிழியும் யாழ். முஸ்லிம்களின் அகதி முகத்திரை?


கவனிப்பாரற்ற நிலையில் யாழ். மத்ரஷா முகாம் முஸ்லிம்கள் 

தட்சா. ஜோ (MRTC)

‘கஸ்டப்படனும்னு தலவிதி. எங்களுக்கு விடிவு எப்பவரும்னு நாள் எண்ணிக்கிட்டிருக்கம் ‘எல்லாம் செய்றம்.. எல்லாம் செய்றம் என்று சொல்றவங்க.. ஒன்னும் செய்றதாக் காணல எனும் வார்த்தைகள் யாழ் முஸ்லிம்கள் இவ்வளவு காலமும் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தின. புத்தளத்தில் இருந்து வந்து எட்டு மாதமாகியும் எவ்வித உதவியும் கிடைக்காத நிலையில் வாழ்கின்றனர் இம்மக்கள்.  அவர்களது குரலில் வாழ்வின் விரக்தியும் ஏமாற்றமும் சேர்ந்தே ஒலிக்கின்றது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்து அவர்களுக்கு அகதி நிலைதான். ஒருவித உதவியும் இல்லாமல் வெறும் நம்பிக்கையுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை சந்தித்தபோது அறிந்து கொண்டேன். ‘நம்பிக்கை வீணாயிருமோன்னு பயமாருக்கு என கூறிய நடுத்தர வயதுப் பெண்ணின் வார்த்தைகளும் கண்ணீரும் ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தன.


இத்தகைய வலிகளைச் சுமந்து கொண்டு வேதனையில் வாழும் மக்கள் வேறுயாருமில்லர். யாழ் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் மத்ரஷா பாடசாலையில் வாழ்ந்து வரும் மக்கள்தான். மத்ரஷா பாடசாலை. இவ் அகதிமுகாமானது யாழ் நகரை அண்டி அமைந்துள்ள மானிப்பாய் வீதியில் ஐந்து சந்திப் பகுதி வழியாகச் சென்றால் வருவோரை வரவேற்கும். இருபத்தியிரண்டு வருடங்களின் பின் மீளக்குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், பாவனையற்ற மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகள், நேரம் தவறாமல் பிரார்த்தனை நடைபெறும் பள்ளிவாசல்கள் போன்றவை சூழ, அமைதியின் இருப்பிடமாகவும் வலிகளின் சாட்சியாகவும் காணப்படுகின்றது இந்த பாடசாலை முகாம்.

இம்முகாமில் வசிப்பவர்களுக்கு நிரந்தர இடமில்லை. இவர்களிற் சிலர் இதுவரை காலமும் புத்தளத்திலும் சிலர் மன்னாரிலும் வசித்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் கடலில் மட்டி பிடித்தலையும் இரும்பு ஏற்றலையுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். பதினைந்து குடும்பங்கள் வாழும் இம்முகாமில் நாம் சென்றபோது எட்டு குடும்பங்களையே சந்திக்க முடிந்தது. இங்குள்ள பாடசாலை மாணவர்கள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் தமது படிப்பைத் தொடர்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இங்குள்ள பெண்கள் வெவ்வேறு காரணங்களால் கணவனை இழந்தும் பிரிந்தும் வாழ்கின்றனர் எனும் தகவல் சற்று வலிக்கத்தான் செய்தது.


மத்ரஷா பாடசாலையின் வகுப்புக்கள் தற்போது சமையலறையாகவும் படுக்கையறையாகவும் பொருட்கள் வைத்தெடுக்கும் அறைகளாகவும் மாற்றமடைந்துள்ளன. வகுப்புகளுக்கு கதவுகள் இல்லை. அருகிலுள்ள பள்ளிவாசலிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து திரட்டும் பணம் அன்றைய பொழுதுக்கே போதாமல் இருக்கும் நிலைமையில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமது எதிர்காலம், நடைமுறை வாழ்க்கை போன்றவற்றை சிந்தித்தே இம்மக்களுடைய வாழ்க்கை வீணாகிக்கொண்டிருக்கின்றது. ஏதோ ஒரு நம்பிக்கைதான் அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. 

மத்ரஷா பாடசாலை முகாம் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக இங்கு சென்றபோது என் கண்ணிற்தென்பட்ட பாடசாலை மாணவனான றொஷானிடம் முகாம் பற்றிக் கேட்டேன் “நான் மன்னார்லயிருந்து வந்திருக்கன். தரம் ஏழு படிக்கிறன். முதல்ல மன்னார்ல படிச்சிட்டு இப்ப இங்க வந்து படிக்கிறது கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கு. நான் நல்லா ஸ்போட்ஸ் செய்வன். நல்லாப் படிப்பன். ப்ரண்ட்ஸை விட்டுட்டு வந்தது கவலையா இருக்கு. இங்க வசதியே இல்ல. வசதி கொஞ்சம் செஞ்சி தந்தரணும் எண்டு எதிர்பார்க்கிறன் என்றான் ஏக்கத் தொனியில்.


இவை பற்றிய மேலதிக தகவலைப் பெறும் நோக்கில் அங்கிருந்த குடும்பத் தலைவியான சலீம் மரினியாவிடம் முகாம் வாழ்க்கை பற்றிக் கேட்டேன். “போன மார்கழில இங்க வந்தம். உடன வெளிக்கிட்டு வாங்க என்று சொன்னத நம்பித்தான் வந்தனாங்க. வந்து மத்ரஷா ஸ்கூல்ல இருந்தம். ஒன்னுமே நடக்கல.1990ல் யாழ்ப்பாணத்தில இருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்துக்கு அகதியாப் போனம். இப்ப அங்கயிருந்து அதே அகதியா இங்க வந்திருக்கிறம். புத்தளத்துலயும் எங்களுக்குச் சொந்த நிலம் இல்ல. இங்க இருக்கிறவங்க கணவன் இல்லாமத்தான் இருக்கிறாங்க. அதால குடும்பத் தலைவிங்கதான் உழைக்க வேணும். என் குடும்பத்த காப்பாத்த என்னால உழைக்க முடியாத அளவிற்கு எனக்கு நெஞ்சில வருத்தம். இதுவரைக்கும் ஒரு நிவாரண உதவியும் எங்களுக்கு கிடைக்கல. பாக்கிஸ்தான்ல இருந்தெல்லாம் வந்தாங்க. இந்துக் குருக்கள் வந்தாரு. கிறிஸ்தவ மதகுரு வந்தாரு. பௌத்த பிக்கு வந்தாரு. யாரும் ஒன்னுமே பண்ணல. பு.யு அம்மா வந்தாங்க. நம்ம கஸ்டங்கள சொன்னம். அதுக்குப்பிறகு முத்திரை தந்தாங்க. சுபையா சேர்தான் கழிப்பிட வசதியும் குடிதண்ணி வசதியும் செஞ்சி தந்தாரு” என்ற அவரது கண்களில் கண்ணிர் வடிந்தது.


மேலும் தொடர்ந்தார் “இத்தனை காலமும் கொட்டிலா இருந்தாலும் மரியாதையா வாழ்ந்தம். இப்ப பாதுகாப்பில்லாத படுக்கையறையால நிம்மதியாத் தூங்கக்கூட முடியல.பிள்ளைக்கு ஒன்பது வயது. ஒஸ்மானியாக் கல்லூரில படிக்கிறான். உம்மாதான் கடல்ல மட்டி பிடித்து ஒழைக்கிறாங்க.வயதான காலத்துல நான்தான் அவங்கள கவனிக்கனும். ஆனா இந்த வயதிலும் உம்மா ஒழைச்சு எங்கள கவனிக்க வேண்டியிருக்கு” என்று சேலைத்தலைப்பால் கண்ணிரைத் துடைத்தார்.  
வுலி, வேதனை, துன்பம், இழப்பு, கண்ணீர் போன்றவற்றுடனேயே அவர்கள் வாழ்க்கை கழிவதைப் பார்க்கும் போது மனம் வேதனையால் துடித்தது.  


“நான் வந்து ஏழு மாதமாச்சு. புத்தளத்துல இருந்துதான் வந்தனான். இங்க மக கூட இருக்கிறன். கணவரை இழந்துட்டன். வருமானம் இல்ல. ஏதாவது கூலி வேலை செய்து வாழ்ந்திட்டிருக்கன்.எல்லாரும் வாறாங்க. போறாங்க. போட்டோ பிடிக்கத்தான் வருவானுங்க. ஒன்னும் தரமாட்டாங்க. நாங்க பெரிசா ஒன்னும் கேட்கல. எங்கட குடும்பத்த பாதுகாக்க ஒரு வீடு வருமானத்துக்கு ஒரு தொழில். அவ்வளவும்தான் கேட்டம். இனியும் கிடைக்குமென்ற நம்பிக்கை இல்ல. எப்போதாவது எழுப்பிப் போடுவாற்களோன்னு பயமா இருக்கு என்று கூறினார் ஷாஹீமா. 

இத்தகைய அவல நிலைகளிற்கு முன்னேற்பாடுகளற்ற மீள்குடியேற்றம் வளப்பற்றாக்குறை குடியடர்த்தி கூடிய பிரதேச வாழ்வு அதிகரித்த குடிசனப்பெருக்கம் யுத்தத்திலான இழப்புக்கள் போன்றவற்றைக் காரணம் காட்டுகின்றார் இப்பகுதிக்கான கிராம சேவகர் க.செல்வகுமார்.


முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர் என்று கூறுவோருக்கு இந்த முகாம் மக்கள் கண்ணிற்குத் தெரியவில்லையா? இருப்பது ஒரு குடும்பமானாலும் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறிருக்கையில் இம்மக்களின் வாழ்விடத்திற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமது அகதி வாழ்வுக்கு ஒர விமோசனம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்ரஷா முகாம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கவெண்டும். அரசில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இம்மக்களுடைய பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வழிவகைகளைச் செய்யவேண்டும்.



நன்றி: இருக்கிறம்

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கிறீஸ் மனிதன் உண்மையா?


எஸ். எல். மன்சூர்

கடந்த சில வாரங்களாக இலங்கையின் மலையகம், கிழக்கு பிரதேசங்களில் அங்குவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையினை கதிகலங்கச் செய்துள்ள மர்மம் நிறைந்ததாகக் கூறப்படுகின்ற கிறீஸ்மேன் எனப்படும் கிறீஸ் மனிதனது நடவடிக்கைகள் புதிராத புதிராகவே காணப்படுகிறது. பல்வேறு கட்டுக்கதைகளுடன் உலவாரும் இம்மனிதர்களது நடவடிக்கைகளைப் பார்க்கின்றபோது பின்புலத்தில் பாரிய சதித்திட்டங்களுடன் நாட்டின் மீண்டும்மோர் பிரச்சினையை கிளப்பி அதில் குளிர்காய நினைக்கும் சதிகாரர்களின் செயற்பாடாக இருக்குமோ? எனவும் மக்களை எண்ணத்தோன்றியுள்ளது. அதேவேளை நாட்டின் இதர பகுதிகளில் இல்லாத அதேவேளை மேற்படிபிராந்தியங்களில் குறிப்பாக பெண்களை மாத்திரம் இம்சைப்;படுத்துகின்ற அல்லது துவம்சம் செய்ய நினைக்கின்ற இம்மனிதர்கள் ஏன் ஆண்களை துவம்சம் செய்வதற்கு நிணைக்காமையானது இன்னும் வேறுபல ஊகங்களையும், சந்தேசகங்களையும் மக்கள் மனதில் கிளப்பிவிட்டுள்ளது.


உண்மையில் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் இறக்காமம் பிரததேசத்தில் இரவு நேரங்களில் பெண்களின் மார்பு, கைகளை பிடிக்கின்ற ஒரு குழு அல்லது ஒரு தனிமனிதன் உலாவுவதாக கதை பரப்பப்பட்டு பின்னர் கையுமெய்யுமாக பிடித்தது, அதன் பின்னர் அங்குள்ள பொலிசாரின் காவல் நிலையத்தின் காப்பரண்கள் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அம்பாறையின் கிராமங்கள் அனைத்தும் பின்னர் படிப்படியாக தோற்றம் பெற்றுவந்த இந்த கிறீஸ் மனிதனது கதை வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசத்தில் பாரிய மக்களது ஆர்ப்பாட்டதில் போய் முடிவுற்றபோது அங்கே பொலிசாரும் பொதுமக்களும் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. உண்மையில் நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு மார்க்கமாக காணப்படும் பொலிசாரின் நடவடிக்கைகள் மக்களின் மனதில் பாரிய வடுவினை ஏற்படுத்துகின்ற நிலைமையில் இந்த அதிரடியான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்வதானது நாட்டில் மீண்டும் இயல்புநிலைக்கு மாற்றமான தோற்றப்பாட்டை யாராவது பின்புலத்திலிருந்து தோற்றுவிக்கின்றனரா? அல்லது உண்மையாகவே மர்மம் நிறைந்த கிறீஸ் மனிதன்தானா? என்பது புரியாத புதிராகவே காணப்படுகிறது.

அதேவேளை இவ்வாறான கிறீஸ் மனிதன் எனச் சந்தேகிக்கப்படும் மனிதர்களை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கின்றபோது அவர்களை விடுவிக்கின்ற பொலிசாரின் செயற்பாடுகளே பொலிசாருக்கும் பொதுமக்களினதும் முறுகளுக்கு காரணம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் வாழைச்சேனைப் மற்றும் பொத்துவில் பகுதிகளில் இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் பாரியளவிலானதாக தோற்றம் பெற்றாலும் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கின்ற நிலைமை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்துவதற்கு கால் கோலாய் அமையும் என்பதாகவும் கூறப்படுகின்றது. 


பதுளை, ராகலை, ஹட்டன் பிரதேசங்களில் சந்தேகத்தின் பேரில் பலர் கைதாகியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அங்கே கிறீஸ் பூதம்(கிறீஸ் யக்கா) என்கிறபேரில் உலாவுகின்ற குழுவொன்றையும் அதிரடிப்படையினர் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்மனிதர்களது செயற்பாடுகள் பற்றி பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹ_லுகல்ல தெரிவிக்கையில் “இதில் எவ்வித உண்மையும் இல்லை” என்றும், பொலிஸ்மா அதிபர் “இம்மர்ம மனிதர்களது நடமாட்டத்தை விசாரிக்க தாம் தயாராக இருப்பதாகவும்” செய்திகள் தெரிவிக்கின்ற அதேவேளை அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இராணுவத்தினர் கடந்த ஒரு சில நாட்களாக இரவு பகல் என்று பாராது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. 

குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் இம்மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் பிள்ளை ஒன்று தற்போது கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான நடவடிக்கைகளை பொலிசார் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என்பதற்காகவே பொலிசார் மீது பொதுமக்கள் மீதான தாக்குதலை மேற்கொண்டனர் எனவும் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களும், அமைச்சர் பௌசி, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா போன்றோரும் நிலைமையை நேரில் அவதானிக்கச் சென்று மக்களை அமைதிப்படுத்தியும் உள்ளனர்.


தற்போது முஸ்லீம்களின் புனித நோன்பு காலம். இக்காலங்களில் இரவுநேரத்தில் பள்ளிகளில் அதிகளவு தொழுகை போன்ற சமயச் செயற்பாடுகளில் ஈடுபடுவது வழக்கம். மர்ம மனிதர்களின் நடமாட்டம், ஊரடங்குச் சட்டம் போன்றவற்றினால் கலவரம் அடைந்துள்ள மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தம் விளைவிக்கின்ற நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே கூடாது. அதேவேளை பொதுமக்கள் சட்டத்தைக் கையிலெடுப்பதும் பிழையான தோற்றத்தை ஏற்படுத்தும். அதேநேரம் இவ்வாறாக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்தமை, சரியான விசாரணை மேற்கொள்ளாமை போன்றனவும் பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியதன் எதிரொலியே பாரியளவிலான விரிசலுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறனவர்களின் நடமாட்டம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் செயலாளருமான ஸ்ரீரங்கா அவர்கள் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் இம் மர்ம மனிதர்கள் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பங்களின் உண்மையான சூத்திரதாரிகளை இதனூடாக கைது செய்ய முடியாமை அவசரகால சட்ட அமுலாக்கம் அர்த்தமற்றது எனவும் கூறியுள்ளார்.


மக்கள் வியாபார நோக்குடன் பிரதேசங்களுக்குள் செல்வதும் வருவதுமாக இருந்த நிலையில் இன்று எப்பிரதேசத்திற்குச் சென்றாலும் மக்கள் பார்வை வித்தியாசமாகவே காணப்படுகிறது. கிறீஸ் மனிதன் குறிப்பாக பெண்கள் தனிமையில் இருக்கின்றபோது அல்லது தனிமையாக செல்லும் போது அவர்களது கைகளில், நெஞ்சில் கத்தியினால் கீறிவிட்டு இரத்தத்தை பஞ்சித் துண்டில் தொட்டுக் கொள்வது எனவும் பொதுமக்களிடையே கதை உலாவுகின்றது. கடந்த 8ஆந்தகதி சம்மாந்துறையில் இரவு 8 மணியளவில் கோரக் கோவில் பிரதேசத்துப் பெண் ஒருவர் குளிக்கின்றபோது அப்பெண்மீது ஒரு மனிதன் சேஷ்டையில் ஈடுபட்டதாகவும் அப்பெண் கூக்குரலிட்டபோது அம்மனிதன் பொலிஸ் நிலையத்திற்குள் சென்;றதாகவும் இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து சப்தமிட்டு கோஷம் எழுப்பினர். அங்குபொலிசார் பொதுமக்களை அகன்று செல்லுமாறு பணித்தபோது பொலிசார் மீது கல்லெறி வீசப்பட்டதாகவும், இதனைத் தடுக்கவே கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கலகத்தை அடக்க முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


இதுபோன்ற சம்பவங்கள் இப்பிராந்தியத்தில் பல இடங்களில் ஏற்படுள்ள நிலையில் பொதுமக்களின் விசனம் காரணமாகவே பொலிசார் பொதுமக்கள் மீதான வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது வீதிமுழுவதும் இராணுவ மயமாக காட்சி தரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அனாமோதய துண்டுப் பிரசுரங்களும் வீசப்பட்டு, உடனடியான ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், நோன்பு காலம் என்பதனால் இராணுவத்தினரின் வீதி உலா நடவடிக்கைகளினால் கடையடைப்புக்களோ ஆர்ப்பாட்டங்களே இடம்பெறவில்லை. பொத்துவில், வாழைச்சேனை, சம்மாந்துறை, இறக்காமம், மலையகம் உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் மக்களின் உள்ளத்தை கிலி கொள்ளச் செய்த மர்ம மனிதன் பற்றிய புதிர் புரியாத புதிராகவே இருக்கப் போகின்றதா? அல்லது இவ்விடயத்தில் அரசியல் பின்னணி கலந்துள்ளதா? இதனைச் செய்பவர்கள் யார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், பெண்களின் இரத்தத்தை மாத்திரம் பெறவேண்டியதன் மர்மம்தான் என்ன? இதுபோன்ற வினாக்களுக்கு விடைகாண்து பொதுமக்களா? பொலிசாரா?; இம்மர்ம மனிதன் உண்மையான கிறீஸ் மனிதனா? அல்லது இயல்பு வாழ்க்கையினை குழப்ப எத்தனிப்பவர்களின் கைவரிசையா? என்பது இன்னும் புதிராகவே தெரிகிறது.

இந்து மயானத்துக்குள் விபச்சாரம்


திருமலை ராஜ் 

திருகோணமலை நகரில் அமைந்துள்ள இந்து மயானத்துக்குள் விபச்சாரம் இடம்பெறுவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் இருக்கிறம் பத்திரிகை பட ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திருகோணமலை இந்து இளைஞர் பேரவையின் செயலாளர், திருகோணமலை நகர சபை செயலாளர் ஆகியோர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து இருக்கிறம் இத்தகவல்களை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்கிறது. இந்தவாரம் வெளியாகியிருக்கின்ற இப்பத்திரிகையிலேயே இக்கட்டுரை வெளியாகியுள்ளது. 


திருகோணமலை நகரிலிருந்து நிலாவெளி செல்லும் பிரதான வீதியில் திருகோணமலை இந்து மயானம் அமைந்துள்ளது. நகர சபை எல்லைக்குள் உள்ள இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான இந்து மக்கள் பயன்படுத்தும் ஒரே இந்து மயானம் இதுவாகும். இங்கு காணப்படும் குறுகிய பரப்பளவிலேயே, நகரத்தில் பெரும்பான்மையாக வாழும் இந்துக்களின் நல்லடக்கங்களும் தகனக் கிரியைகளும் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு நிக்கோட் நிறுவனத்தின் உதவியுடன் சுமார் எட்டு மில்லியன் ரூபா செலவில் எரிவாயுவினால் இயங்கும் தகனக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜீலை 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் முதலாவதாக அமைக்கப்பட்டதும் இன்றுவரை காணப்படுவதுமான ஒரே தகனக்கூடம் இதுவாகும். 

ஆனால் வருட ஆரம்பத்தில் திருகோணமலையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்த இயந்திரத்தில் உள்ள மோட்டார் ஒன்று பழுதடைந்துவிட்டது. அதனால் ஜனவரி 24ஆம் தகதியிலிருந்து இத்தகனக்கூடம் பாவனைக்குட்படுத்தப்படாது உள்ளது. திருகோணமலை நகரசபையின் சபைக்கூட்டத்தில் இது கவனத்திற்கு கொண்டு வந்த போதும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது திருமலை மக்களை விசனமடைய வைத்தது. 


அத்துடன் இந்த வாயு தகனக்கூடத்தை தொழிநுட்ப ரீதியாக இயக்கும் உத்தியோகத்தர் இது தொடர்பான பயிற்சி ஏதும் பெற்றிறாதவர் என்பதுடன் நகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளே இதனை இயக்கும் பரிதாப நிலையும் இங்கு காணப்பட்டு வந்தது. பிற மாவட்ட வாயு தகனக்கூடங்களைப்போல் இவ்விடம் சுகாதாரமாகவோ துப்பரவாகவோ காணப்படுவதில்லை. 

அவ்விடத்தால் செல்லும் போது முகத்தை சுளிக்கும் நிலையிலேயே இந்தச் சூழல் காணப்படுகின்றது. அத்துடன் தகனம் செய்யப்படும் உடல்களின் எச்சங்களும் மிருகங்களால் இழுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே கிடப்பது அருவருப்பைத் தருகிறது. ஒரு நாளைக்கு அண்ணளவாக இரண்டுக்கும் மேற்பட்ட நல்லடக்கங்கள் இடம்பெறுகின்றன. இருந்தும் பராமரிப்பற்ற நிலையிலேயே இம் மயானம் காணப்படுகின்றது.

இந்த மயானத்தை பராமரிக்கும் பணியானது திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொறுப்பிலேயே கடந்த பல வருடங்களாக இருந்தது. இதில் அவர்கள் வருடாந்தம் ஒரு சிரமதானப் பணியினை நிகழ்த்துவது வழக்கம் தற்போது இப்பணி தொடர்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

இவை எல்லாவற்றையும் விட கொடுமை என்ன தெரியுமா? மயானக் காவலாளியாக பணிக்கமர்த்தப்பட்டவருக்கு ஒரு தங்குமிடம் உள்ளது. இதில் அவருடைய உறவினர்கள் எனும் பெயரில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இதிலே உள்ளவர்களில் சிறுவர்களும் பெண்களுமே அதிகமாக இருந்தாலும் அப் பெண்களோ கடந்த பல வருடங்களாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருவது அப்பிரதேசத்தவர்கள் எல்லோரும் அறிந்ததே. 


ஆனாலும் இவர்கள் அடிக்கடி பொலிஸாரால் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் வழமையான ஒன்றாகும். ஆனால் அவர்கள் தண்டனை பெற்று சிறிதுகாலத்தில் வெளியில் வந்துவிடுவார்கள். இனி என்ன.. பழைய குருடி கதவை திறடி கதைதான். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே காணப்படுகின்றது. கடந்த ஜீன் மாதம் மேற்படி மயானப்பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஏற்கனவே மயானத்தை பராமரித்து வந்த காவலாளியின் மனைவியின் சடலம் என இனம் காணப்பட்டு தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பாக இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் செ. விஜயசுந்தரம் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம். ‘நாங்கள் தான் ஒரு காவலாளியை வைச்சனாங்கள். அவர் தவறான வழிக்கு போனதால நாங்க அவரை நிற்பாட்டிட்டம். காவலாளிக்கு உரிய பாதுகாப்பு வீட்டை நாங்கள் பூட்டுப்போட்டு பூட்டினோம். கோபத்தில் அவர் பாதுகாப்பு படையினரின் உதவியோட அதை உடைச்சி அதுல கொஞ்சம் பொம்புளைகள வைச்சி விபச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். 


இது சம்பந்தமாக நாங்கள் பொலிஸிற்கு அறிவிச்சனாங்கள. இங்கு விபச்சாரம் நடக்குது அதை நிற்பாட்டுங்க எண்டு நாங்கள் பதிவுத் தபாலில திருகோணமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் (SSP) க்கு ஒரு கடிதம் அனுப்பினம். ஒரு பதிலும் இல்ல. அந்த இடத்துக்கு பாதுகாப்புப் பணியில இருக்கிற ஆக்கள்தான் விபச்சாரத்துக்கு போறாங்கள். இந்து மயானமும் ஒரு சிங்களப் பகுதியை அண்டித்தான் இருக்குது. 

அங்க இருக்கும் சிங்கள ஆக்கள் மற்றும் பாதுகாப்பு படையில உள்ளவங்க சம்மந்தப்பட்டுத்தான் இது நடக்குது. இப்ப அதுக்கு ஒரு பிரதான கேட் ஒன்றைச் செய்து போட இருக்கிறம். ஏற்கெனவே அந்த வீட்டை பூட்டு போட்டு பூட்டினம். திரும்பி உடைச்சிப் போட்டு அதுக்குள்ள இருக்கிறாங்கள். என்றவரை மறித்து இந்த அத்துமீறல் தொடர்பாக குறிப்பிட்ட பெண்களுடன் கதைத்தீர்களா? என்று கேட்டோம். 

நான் ஒருநாள் அந்தப் பகுதிக்கு போனனான். அங்க இருந்த பொம்புளைகள் என்னக் கண்டு ஓட வெளிக்கிட்டவங்கள். அப்ப அங்க இருந்த காவலாளி சில ஆக்களுக்குச் சொல்லி அவங்க என்னையும் துரத்த வெளிக்கிட்டவங்கள். அதுக்குப் பிறகு நானும் அந்த பக்கம் போறதில்ல. 40, 50 வருடங்களாக நாங்க இந்த மயானத்த நிர்வகிச்சுக்கொண்டு வாறம். இப்போ என்ன செய்யிறதெண்டு தெரியாம ஒரு இக்கட்டான நிலைமையில இருக்கம்’ என்று தெரிவித்தார். 


இப்பிரச்சினை தொர்பாக நாம் திருகோணமலை நகர சபை செயலாளர் A.L.M. நஃபீல் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். ‘இவ்வளவு காலமும் இந்து மயானத்தை இந்துப் பேரவைதான் நிர்வகித்துக்கொண்டு வருகின்றது. அதை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று ஒரு திட்டத்தை நகர சபை தலைவர் கொண்டு வந்திருக்கிறார். அதன் அடிப்படையில் இதனை நாங்கள் கையேற்று அதனை நிர்வகிப்போம். 

இப்போதும் சிரமதான பணிகளை முன்னெடுக்கின்றோம். உள்ளுராட்சி வாரத் திட்டத்துக்குக் கீழ் இதனை உள்வாங்கியிருக்கிறம். இதன் அடிப்படையில் மரங்களை நட்டு சிரமதானம் செய்து அதனை நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைய எடுக்கிறம். அதேநேரம் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் எங்கள் நகரசபையால நியமித்து நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கிறம். பொதுமக்கள் எங்களிடம் முறையிடுகின்றனர். நாங்கள் தலைவரின் கவனத்திற்கு இவ்விடயங்களை கொண்டு வந்திருக்கிறம். கூடிய விரைவில் அதனை நாங்கள் பொறுப்பேற்று எங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிருக்கிறோம்’ என்று தெரிவித்தார். 

தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பயணம் செய்யும் வீதியில் இவ்வாறான பராமரிப்பற்ற மயானம் இருப்பதும் ஆச்சரியத்தை தருகின்றது. அதுமட்டுமல்ல மயானத்தையும் விட்டுவைக்காமல் அங்கு பிணத்துக்கு மேலே விபச்சாரம் நடாத்துகின்றனர். 

நாட்டைக் காக்கும் பாதுகாப்புப் படையினரும் இதற்கு உடந்தையாக இருப்பது என்ன ஒரு அநியாயம்? பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படாதது பொலிஸாரின் மேல் நம்பிக்கையீனத்தைத் தோற்றுவித்திருக்கிறது. நகர சபை செயலாளர் கூறியதைப்போல் விரைவில் இவ்வாறான சமூகசீரழிவுக்கு முடிவுகட்டப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

நன்றி: இருக்கிறம்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites